தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இது வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள இரண்டாவது புயல் சின்னம் ஆகும்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, இன்று காலை 5.30 மணியளவில் தாழ்வுப்பகுதியாக உருப்பெற்றுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
கடந்த வார தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியிருப்பதால், அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.