தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததால் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் இது மேலும் வலுவடையாது என்றும், வலு குறைந்து ஆந்திரா - தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதை தொடர்ந்து நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் மழைப்பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K