பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் சிறுபான்மையினர் ஓட்டை வாங்க முடியாது என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேறு எந்த பெரிய கட்சியும் தம்முடன் கூட்டணிக்கு வராது என்பதை புரிந்து கொண்ட பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டார். ஆனால் இது தொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்காமல் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்..
எனவே இந்த கூட்டணிக்கு அமித்ஷா தலைவரா? இல்லை பழனிச்சாமி தலைவரா? என்கிற விவாதம் துவங்கியது. இந்த கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைவர்.. முதல்வர் வேட்பாளரும் அவர்தான் என அதிமுகவினர் சொன்னார்கள். ஆனால் பாஜகவோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அதுவும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேறிய பின் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. வருகிற 14-ஆம் தேதி டெல்லி செல்லும் நயினர் நாகேந்திரன் அங்கு அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். அதற்கு முன் அவர் எடப்பாடி பழனிச்சாமிடம் ஆலோசனை நடத்திருப்பதால் அரசியல்ரீதியாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
வெளியே வந்த நயினர் நாகேந்திரனிடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் இணைப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.