கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கரூர் மாநகராட்சியில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் முடங்கியிருப்பதை சரிசெய்ய மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
"தேர்தல் ஆணையம் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் 'SIR' நடவடிக்கையை அமல்படுத்தாமல், தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் ஏன் நடத்துகிறார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
'SIR' நடவடிக்கை தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்கும் செயல் என்று அவர் விமர்சித்தார். மேலும் 'SIR' நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் அதிமுக, துரோகத்திற்கு துணை போகக்கூடாது என்று வலியுறுத்திய அவர், முதல்வர் அழைப்பு விடுத்துள்ள 'SIR' எதிர்ப்பு கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் கோரினார்.