நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததுடன், தற்போதைய சூழலில் கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு அரிதாகி வருவதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார்.
இந்தச் சூழலில், வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காடுகளை பாதுகாப்பதாகக் கூறி, வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பதில்லை. இதனால், கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரையில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி (இன்று) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ஆடு மாடுகள் மாநாடு' ஒன்றை நடத்துகிறார். இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஆடு மாடுகளுடன் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.
கல்விதான் மனிதனுக்கு செல்வம் என்றாலும், மாடும் செல்வங்கள்தான். அந்த செல்வங்களை பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம். ஆடும், மாடும் அற்ப உயிர்கள் அல்ல. நம் அருமைச் செல்வங்கள் என்று சீமான் இந்த மாநாடு குறித்து தெரிவித்துள்ளார்.