நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், "போதைப் பொருளை விற்றவர்களை கண்டுபிடித்தீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது சீமான், "நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருமே அப்பாவிகள். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் சினிமா உலகில் போதைப்பொருள் பயன்படுத்தவே இல்லையா?" என்று வினவினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதானி துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கியதை அனைவரும் அறிவோம். அந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய இருவரை கைது செய்துவிட்டீர்கள். ஆனால், விற்றவர்களை யார் கைது செய்தார்கள்? போதைப் பொருள் எங்கிருந்து வருகிறதோ, அந்த வேரை வெட்ட வேண்டும். இந்த இரண்டு நடிகர்களை கைது செய்துவிட்டால், போதைப் பொருள் பழக்கம் நின்றுவிடுமா? இந்தியா முழுவதும் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.
மேலும், சினிமா வட்டாரத்தில் நடக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்துப் பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டது இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.