அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுதான் நேற்று காலை முதலே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயை தவிர தெரிந்த முகம் யாருமில்லை. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் இல்லை.. எல்லாம் இளம் வயதுடையவர்கள் என திமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்த நிலையில்தான் 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் அந்த கட்சியில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் கண்டிப்பாக தவெக பலம்பெறும் என கணிக்கப்படுகிறது. அதோடு அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் தலைமை மீது அதிருப்தி உடையவர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிருப்தி கொண்ட பலரும் செங்கோட்டையனை பின் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கு வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. இதனால் தவெக மேலும் பலம் பெறும் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் ஒரு சின்ன விஷயத்தில் சத்தமே இல்லாமல் ஸ்கோர் செய்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். நேற்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்து செங்கோட்டையன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்ட போது அவரின் சட்டையில் ஜெயலலிதா படம் இருந்தது. அதன்பின் அவர் செய்தியாளரை சந்தித்தபோதும் அவரின் சட்டையில் அந்த புகைப்படம் இருந்தது.
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு தவெக ஒரு ஜனநாயக கட்சி. பிடித்தவர்களின் படத்தை வைத்துக்கொள்ள யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இன்று நான் படத்தை மாற்றி இருந்தால் நிமிடத்திற்கு ஒரு கட்சி மாறி படத்தை மாற்றி விட்டார் என நீங்கள் சொல்லி இருப்பீர்கள்.. ஆனால் படத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என இங்கே யாரும் சொல்லவில்லை என செங்கோட்டையன் பேசி இருந்தார்.
விஜயின் இந்த குணத்தை பாராட்ட வேண்டாம். ஒருவரை அவர்களாகவே இருக்க விடுவது முக்கியம்.. யாரையும் கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைப்பதில் விஜய்க்கு விருப்பமில்லை. அந்த குணத்தால்தான் அவர் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அதே பண்பு அரசியலிலும் அவருக்கு கை கொடுக்கிறது என பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.