இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நாளை முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்வதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய பகுதிகளிலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும். அதேபோல் இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 24 அன்று, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், பொதுமக்கள் இந்த ஆறு நாட்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.