தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும், நவம்பர் 22-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருநெல்வேலி மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 22 அன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட பல தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
இன்று தமிழகக் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.