விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இன்று இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"எனக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறுவயதிலிருந்து எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. தேர்தல் வெற்றியை கடந்து, சமூக அரசியல் மாற்றத்திற்காக ஒரு தலைவரை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
நான் விருப்ப ஓய்வு பெற்றதும், எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்ற சாய்ஸே இல்லை. விஜய் கட்சி தான் என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டேன்.
ஜனநாயக நாட்டில் மக்களிடம் தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் மட்டுமே கொள்கைப் பிடிப்பு இருக்கிறது; வேறு எந்தக் கட்சியிலும் இல்லை," என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் வீட்டுக்கு ரெய்டு செய்தவர் நீங்கள்தானே?" என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்பது உண்மை அல்ல. அது தவறான தகவல்," என்று விளக்கம் அளித்தார்.