தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "விஜய் கட்சியுடன் கூட்டணியா?" என்ற கேள்விக்கு தனது பதிலை கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூரில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதிமுக தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை," என்று தெரிவித்தார்.
"விஜய் கட்சியுடன் கூட்டணியா?" என்ற கேள்விக்கு, "நீங்கள் அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். இதற்கான பதிலை விஜய் தான் சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார். மேலும், "2026ல் கூட்டணி ஆட்சி வந்தால்தான் நல்லது. அப்போதுதான் ஆளும் கட்சி தப்புச் செய்தால், அதை கூட்டணியில் உள்ள கட்சிகள் தட்டிக் கேட்கும்," என்றும் தெரிவித்தார்.
மேலும், "மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிம வள கொள்ளை ஆகியவை தமிழகத்தில் நடப்பதாகவும், இதனை முதல்வர் சரி செய்ய வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.