தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு பகுதிகளிலும், நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட பகுதிகளிலும் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிக்கை காரணமாக, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.