அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த தலைவர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய அதிரடி நடவடிக்கை தொடர்கிறது. நீக்கப்பட்டவர்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ. முத்துசாமி மற்றும் அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் அடங்குவர்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இவர்கள் அனைவரும் நீக்கப்படுவதாக ஈ.பி.எஸ். அறிவித்துள்ளார். இந்த தொடர்ச்சியான நீக்கங்கள், கட்சியின் தலைமை மற்றும் அதிகாரத்தின் மீதான ஈ.பி.எஸ்ஸின் கட்டுப்பாட்டை மேலும் பலப்படுத்துவதாகவும், தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.