கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கினார். எனவே செங்கோட்டையன் செல்லுமிடமெங்கும் எடப்பாடி பழனிச்சாமி பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு பல குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுகவில் எல்லோரையும் நீக்கி வருகிறார்கள். இப்படியே போனால் கட்சி அமாவாசை ஆகிவிடும். அதிமுகவை ஒருங்கிணைக்க சொன்னதே பாஜக தலைமைதான். ஜெயலலிதா நேரடியாக நியமித்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும்தான். எடப்பாடி பழனிச்சாமி புறவாசல் வழியாக முதல்வர் ஆனவர் என்றெல்லாம் காட்டமாக விமர்சித்து இருந்தார். மேலும் அதிமுகவிலும் வாரிசு அரசியல் நடக்கிறது என்றெல்லாம் பல புகார்களை சொன்னார்.
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனின் புகார்களுக்கு பதில் சொன்னார்.
என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய பழனிச்சாமி அதிமுகவில் வாரிசு அரசியல் என்கிற குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் சொன்ன கருத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது நேர விரயம்.. அது எப்போது முடிந்து போய்விட்டது. முடிந்துபோன விஷயத்தை பற்றி திரும்பத் திரும்ப கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளரிடம் சொன்னார்.
மேலும் அதிமுக பற்றி குறை சொல்ல எதுவுமில்லை. எனவே பாஜகவுடன் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி பற்றி திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. திமுக ஆட்சியில் சுமார் 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக திமுக அமைச்சரே கூறினார் என பேசினார் பழனிச்சாமி. அதோடு தவெக கூட்டத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு எல்லா கட்சியும் அப்படிதான் பேசுவார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி சொல்வது வழக்கமான ஒன்றுதான் பதிலளித்தார் பழனிச்சாமி.