Publish Date: Fri, 07 Nov 2025 (20:31 IST)
Updated Date: Fri, 07 Nov 2025 (20:36 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் எப்படி தர்மயுத்தம் நடத்தினாரோ அதுபோல தற்போது செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே முதல் உருவாகி இருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே செங்கோட்டையன் தனித்து செயல்பட தொடங்கினார். எனவே கட்சிக்கு எதிராக நடப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
சமீபத்தில் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இன்று உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மீது அடுக்கடுக்கான புகார்களை சொன்னார்.
கொல்லைப்புறமாக முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என்னை அவர்தான் அமைச்சராக்கினார் என பேசுகிறார். அம்மா ஜெயலலிதா முதல்வராக்கியது ஓ பன்னீர் செல்வத்தை மட்டும்தான். எல்லோரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் பழனிச்சாமிக்கு இல்லை. இப்படி எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கினால் அதிமுக விரைவில் அமாவாசை ஆகிவிடும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்து என்னிடம் கூறியது பாஜக. அதைத்தான் நான் செய்தேன் என்றெல்லாம் பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அவர் செங்கோட்டையன் அளித்த பேட்டியை நானும் பார்த்தேன். அவர் பாஜகவில் யாரை பார்த்தார்? யாரிடம் பேசினார்? என அவர் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. செங்கோட்டையன் பேசுவதை பார்க்கும்போது அவருக்கு பின்னால் திமுக இருக்கிறதா என்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்று கொளுத்தி போட்டிருக்கிறார்.