Publish Date: Thu, 19 Feb 2026 (11:39 IST)
Updated Date: Thu, 19 Feb 2026 (11:41 IST)
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி பேசிவந்த தேமுதிக இறுதியாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. 20 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் என பிரேமலதா கேட்டதால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன்பின் தேமுதிக கொஞ்சம் இறங்கி வந்து 10 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், இன்று காலை பிரேமலதா விஜயகாந்த் தனது சகோதரர் சுதீஷுடன் அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். இதன் மூலம் திமுக கூட்டணியில் திமுக இணைவது உறுதியாகியிருக்கிறது.
கடந்த 10 வருடங்களாக தேமுதிகவில் யாரும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான், திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது தேமுதிக. கூட்டணி உறுதியான பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் 2016,ம் வருடமே திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டியது. கேப்டன் இருந்தபோதே இது நடந்திருக்க வேண்டும். எவ்வளவு தொகுதிகள் என்பது பற்றி நேரம் வரும்போது அண்ணன் ஸ்டாலின் முறையாக அறிவிப்பார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீகளா? என கேட்டனர். அதற்கு அதை பின்னால் சொல்கிறேன் என பிரேமலதா பதிலளித்தார்.