Publish Date: Sun, 30 Nov 2025 (09:08 IST)
Updated Date: Sun, 30 Nov 2025 (09:10 IST)
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல், சென்னைக்குக் கிழக்கே சுமார் 2050 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலையில், அதன் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தபோதிலும், டிட்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதால், மிதமான மழை பெய்து வருகிறது.
இருப்பினும், சென்னை மெரினா கடற்கரையில் தற்போது பலத்த காற்று வீசி வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்று மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக வியாபாரம் இல்லை என்று மாமல்லபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று இரவு வரை சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.