அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க பொருட்களுக்கு நாமும் 50% வரி விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் 17% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 50% வரி விதிக்கும்போது, நாமும் ஏன் 17% என்ற அளவில் நிறுத்த வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என்றால், அமெரிக்காவை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியாவை விட சீனா தான் அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறது என்றும், ஆனால் சீனாவுக்கு 90 நாட்கள் காலக்கெடு கொடுத்த அமெரிக்கா, இந்தியாவுக்கு வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சசி தரூரின் இந்த கருத்து, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் 50% வரியை விதிக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போரை மேலும் தீவிரமாக்கும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.