2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு தரப்பின் பெரும் தோல்வி என்றும் விமர்சிக்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 12 பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அதில் 5 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ள 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள் அணில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தானி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை என்றும், எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மும்பை நகரின் பயணிகள் ரயில்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.