மும்பையில் மின்சார ரயில்களில் அளவுக்கு அதிகமாகக் கூட்டம் இருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வர அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கும் நிலையில், இந்த நெரிசலில் சரியான நேரத்திற்கு அலுவலகம் வருவது என்பது சவாலாக உள்ளது என்று ஏற்கனவே பல அரசு ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர். சில தனியார் நிறுவனங்கள் பணி நேரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு ஊழியர்களின் பணிநேரம் மாற்றப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் காலையில் அரை மணி நேரம் தாமதமாக பணிக்கு வரலாம் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரசாத் சரணாயக் என்பவர் கூறுகையில், "புறநகர் ரயில் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்வதைத் தவிர்க்க அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரை மணி நேரத்தை மாலையில் கூடுதலாப் பணி செய்ய வேண்டும் என்றும், எனவே அரசு ஊழியர்கள் அவசரமாக வர வேண்டிய அவசியம் இருக்காது" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "மெட்ரோ ரயில் அல்லது வேறு வகையான போக்குவரத்தை பயன்படுத்த ஊழியர்கள் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்பதில் அரசு கவனமாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.