Publish Date: Wed, 18 Jun 2025 (07:56 IST)
Updated Date: Wed, 18 Jun 2025 (07:58 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் 64 வயது நோயாளி அபிமான் கிர்தர் டயடேவை, ஆட்டோரிக்ஷாவிலேயே பரிசோதித்த டாக்டர் பிரபு அஹுஜா, 'இறந்துவிட்டார்' என அறிவித்து இறப்பு சான்றிதழையும் வழங்கினார். ஆனால், இறுதிச் சடங்கிற்கு தயாராகும்போது, டயடே மூச்சு விடுவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை. இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை மருத்துவமனைக்கும் டாக்டர் அஹுஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் அஹுஜா, "நுரை தள்ளியதையும், மூச்சு சத்தம் இல்லாததையும் கண்டேன். வென்டிலேட்டர் தேவை என சொன்னேன். குடும்பத்தினர் இறப்புச் சான்றிதழ் கேட்டபோது, அவர் உயிருடன் இருக்கிறார் என்பது தெரியாமல் கொடுத்தேன்" என விளக்கமளித்தார். ஆனால், முறையான பரிசோதனை இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து அவரால் விளக்க முடியவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தானே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.