கர்நாடக மாநிலத்தில் சிறுவனுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை அளித்த நர்ஸ், தையல் போடாமல், பெவிகுவிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி அருகில் உள்ள அடூர் என்ற ஆரம்ப சுகாதார மையத்தில், காயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்காக சென்றார். அங்கு பணியில் இருந்த நர்ஸ், சிறுவனின் காயத்துக்கு தையல் போடுவதற்கு பதிலாக, பெவிகுவிக் ஒட்டிவிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்த சிறுவன், நடந்ததை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, நர்ஸிடம் நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது, "தையல் போட்டால் சிறுவனின் கன்னத்தில் தழும்பு ஏற்படும். அதனால் தான் பெவிகுவிக் தடவினேன்" என நர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதால், கண்டனங்கள் குவிந்தன. இதனை அடுத்து, ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உடனடியாக நர்சை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "நர்ஸ் உண்மையிலேயே படித்தவர் தானா? என்பதை சோதனை செய்ய வேண்டும்" என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.