அகமதாபாத் விமான விபத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமானங்கள் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டு வருவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் மருத்துவ விடுதியில் மோதி வெடித்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அனைத்து விமானங்களும் புறப்படும் கடைசி நேரம் வரை பல பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும் நிலையில் பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறால் ரத்தாகி வருகின்றன.
நேற்று ஏர் இந்தியா உள்பட பல நிறுவனங்களின் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் பல்வேறு வழித்தடத்தில் ரத்தானது. இன்றும், மஸ்கட் - டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம், அகமதாபாத்தில் இருந்து காட்விக் செல்லும் விமானங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து தற்போது டெல்லியில் இருந்து பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா 143 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விமானம் கடைசி நேர பாதுகாப்பு சோதனையில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
அதனால் பயணிகளுக்கு ஹோட்டல் அறைகளும், முழுப்பணத்தையும் திரும்ப தருவது அல்லது மறுநாள் பயணத்தை தொடங்குவது உள்ளிட்ட ஆப்ஷனையும் வழங்கியுள்ளது ஏர் இந்தியா.
மேலும் மறுமார்க்கமாக நாளை பாரிஸில் இருந்து டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் ஏர் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K