மகாராஷ்டிராவின் பாள்கர் மாவட்டம் மொகாடாவில், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததாலும், ஆம்புலன்ஸ் வராததாலும் ஒரு கர்ப்பிணி பெண் தனது வயிற்றில் இருந்த குழந்தையை இழந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 10 அன்று பிரசவ வலி ஏற்பட்ட அவிதா கவாருக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவில்லை. குடும்பத்தினர் தனியார் வாகனத்தில் கோடாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, நிலைமை மோசமானதால், மொகாடா மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டார்.
இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸால், கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டது என கணவர் சக்காராம் கவார் குற்றம் சாட்டினார். பின்னர், உயிரிழந்த குழந்தையை மஞ்சப்பையில் வைத்துக்கொண்டு, 80 கி.மீ. தூரம் அரசு பேருந்தில் பயணம் செய்து இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார். நியாயம் கேட்ட தன்னை காவல்துறை தாக்கியதாகவும் சக்காராம் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சக்காராம் போதையில் இருந்ததாகவும், அவரது ஆக்ரோஷமான நடத்தை காரணமாகவே வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் ஆம்புலன்ஸ் தாமதமானதை மருத்துவ அதிகாரி ஒப்புக்கொண்டார். தாயான அவிதா, நாசிக் சிவில் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டார்.