திருவாரூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தின் மூலம் ஏற்பட்ட காதலில், காதலன் திடீரென குளத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூரை சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர், ஒரு கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பின் காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திருவாரூரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரவீன் குமார், அங்கிருந்த குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்ட காதலியும் அவரை காப்பாற்றுவதற்காக உடனே குளத்தில் குதித்தார். ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், பிரவீன் குமார் இறந்துவிட்டதாகவும், அவரது காதலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த காதல் மற்றும் தற்கொலை முயற்சி சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.