மேற்கு வங்கம், ஹூக்ளி மாவட்டம், தாரகேஸ்வர் ரயில் நிலையம் அருகே பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில், சிறுமி கடத்தப்பட்டு, பின்னர் இரத்தம் தோய்ந்த நிலையில் வடிகால் அருகே கண்டெடுக்கப்பட்டார். பல மணி நேர சிகிச்சைக்குப் பிறகும், சிறுமி தொடர்ந்து அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தவறியதாகவும், குடும்பத்தினர் காவல் நிலையத்தை அணுகியபோது அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பாஜகவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "தாரகேஸ்வர் போலீசார் குற்றத்தை சமாளிப்பதில் பிஸியாக உள்ளனர். மம்தா பானர்ஜி, நீங்கள் தோல்வியடைந்த முதலமைச்சர்" என்று கடுமையாக விமர்சித்தார்.
சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் வசம் உள்ள பகுதியில் 'பாதுகாப்புக் குறைபாடு' என்று உள்ளூர் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.