ஆந்திர பிரதேசத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கும் ஸ்த்ரீ சக்தி திட்டம் இன்று விஜயவாடாவில் தொடங்கப்பட்டது. இந்த விழாவில், மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு, இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான சூப்பர் சிக்ஸ் உறுதிமொழிகளில் ஸ்த்ரீ சக்தி திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்படி, ஆந்திர பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோர் மாநில அரசின் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த திட்டம், ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்து கழகத்தின் அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கு பொருந்தும்.
இந்த திட்டத்தைத் தொடக்கிவைக்கும் விதமாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் ஐ.டி. அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் பயணிகளுடன் ஒரு பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது, அவர்கள் பெண் பயணிகளுடன் கலந்துரையாடி, இலவச பயணத் திட்டம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால், பெண்களுக்கு பயணச் செலவு பெருமளவு குறையும். இலவச பயணச் சீட்டைப் பெற, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் அட்டை போன்ற வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.