இந்தியாவில் மகளிரை கவரும் வகையில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட நிபந்தனையற்ற பண பரிவர்த்தனை திட்டங்கள், தற்போது 12 மாநிலங்களுக்கு விரிவடைந்துள்ளதாக பி.ஆர்.எஸ். சட்டசபை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு மாநிலங்களில் மட்டுமே இருந்த இத்திட்டங்கள், இப்போது தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் உள்ளன.
இந்த 12 மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1.68 லட்சம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மாபெரும் செலவினத்தால், இத்திட்டங்களை செயல்படுத்தும் ஆறு மாநிலங்கள் தற்போது வருவாய் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை மகளிருக்கான செலவினங்களை நீக்கினால், அவற்றின் பற்றாக்குறை நீங்கி உபரி வருவாயாக மாறும் நிலை உள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்கம் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் சுமையை குறைக்க முயல்கின்றன. இத்தகைய மானிய செலவினங்கள் அத்தியாவசிய வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும் என ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.