தெலங்கானா மாநிலம், மஹ்பூபாபாத் நகரில் யூரியா உர மூட்டைகளுக்காக வரிசையில் நின்ற இரண்டு பெண்கள், ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உர மூட்டைகளை வாங்க ஆதார் அட்டை நகல்களுடன் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இரு பெண்களும் ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து, சாலையில் சண்டையிட்டுக் கொண்டனர். அங்கிருந்த இரு ஆண்கள் தலையிட்டு, அவர்களைப் பிரித்துவிட்டனர்.
இந்த சண்டையின்போது அங்கிருந்த சிலர் கைதட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பதிலளித்துள்ளார். யூரியா இருப்பு உள்ளபோதிலும், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் குழப்பம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
முன்னதாக, உறுதியளிக்கப்பட்ட யூரியா ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கத் தவறியதால், பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் அவதிப்படுவதாகவும், ஆங்காங்கே போராட்டங்கள் நடப்பதாகவும் தெலங்கானா அரசு குற்றம் சாட்டியது.