உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த என்கவுன்ட்டர் நிபுணர் டி.எஸ்.பி. ரிஷிகாந்த் சுக்லா, ஊழல் மற்றும் மிரட்டல் மூலம் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்தது, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சுக்லா, தனது 'என்கவுன்ட்டர் அதிகாரி' என்ற அச்சத்தை பயன்படுத்தி, நில உரிமையாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பேன் என்று மிரட்டி, துப்பாக்கி முனையில் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தன்னுடைய ரூ.70 கோடி மதிப்புள்ள நிலத்தை இழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கான்பூரை சேர்ந்த வழக்கறிஞர் அகிலேஷ் துபேவுடன் இணைந்து சுக்லா ஒரு குற்ற கும்பலை நடத்தியதாகவும், போலியான பாலியல் வன்புணர்வு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து பணம் பறித்ததாகவும் SIT கண்டறிந்துள்ளது.
சுக்லா, தனது கருப்பு பணத்தைத் துபேவின் கட்டுமான நிறுவனத்தில் மனைவி பிரபா சுக்லா மூலம் முதலீடு செய்து வெள்ளை பணமாக மாற்றியுள்ளார். ரூ.92 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை SIT அடையாளம் கண்டுள்ளது. அரசியல் ஆதரவு காரணமாக இவ்வளவு காலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. தற்போது சொத்துக்களை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.