சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் இரண்டாவது விமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த நிலையில், அந்த விமானத்தில் வந்தவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவி ஏற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே கடந்த ஐந்தாம் தேதி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. அப்போது, அவர்கள் கை கால்களில் விலங்குகள் கட்டப்பட்டிருந்தது. இது பெரும் சச்சரவையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று அமிர்தசரஸ் நகருக்கு வந்த இரண்டாவது விமானத்தில் 119 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதை பயணிகள் உறுதி செய்துள்ளதால், இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.