அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி வரும் நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கூடிய விமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவது ஏன் என அம்மாநில முதல்வர் பகவத் மான் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இதனை செய்கிறதா? பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சந்தித்துக் கொண்டதற்குப் ட்ரம்ப் கொடுக்கும் பரிசுதான் இதுவா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்க வேண்டியது ஏன் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் ஏற்கெனவே ஒரு விமானத்தில் நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது விமானமும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, பஞ்சாப் மாநில முதல்வர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.