தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டல தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா அரசு பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
விபத்தின் துயரத்திற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி. ஹனுமந்த ராவ் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. விபத்துக் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் வி. ஹனுமந்த ராவ், "அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் அமலில் இருப்பதால், விபத்தின்போது பேருந்தில் பெண்கள் அதிகமாக இருந்தனர்" என்று கூறியுள்ளார்.
மறுபுறம், உள்ளூர் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், 2017 முதல் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் மாநில அரசின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டி, அரசியல் பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளார். எனினும், ஹனுமந்த ராவின் உணர்ச்சியற்ற கருத்தே அரசியல் களத்தில் அதிக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.