சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள புதுங் விமான நிலையத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய பயணி ஒருவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் அத்துமீறல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் பெமா வாங்சோம் தோங்டோக் நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்கு பயணம் செய்தபோது ஷாங்காயின் புதுங் விமான நிலையத்தில் வந்துள்ளார்.
மூன்று மணி நேரம் மட்டுமே நீடிக்க வேண்டிய அவரது பயணம், சீன குடிவரவு அதிகாரிகளின் நடவடிக்கையால் 18 மணி நேர சோதனையாக மாறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த இடம் அருணாச்சலப் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காரணம் காட்டி, அவரது பாஸ்போர்ட்டை சீன அதிகாரிகள் "செல்லாதது" என்று அறிவித்ததாக பெமா வாங்சோம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சீனா விளக்கமளித்துள்ளது. விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சீன சட்டங்களுக்கு இணங்கவே இருந்தன என்று கூறி, துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.