ராஜஸ்தானின் உதய்ப்பூரில், 55 வயதான ரேகா என்ற பெண், தனது 17வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடும் வறுமைக்கு மத்தியில், அந்த குடும்பம் இன்னொரு குழந்தையை வரவேற்றுள்ளது.
உதய்ப்பூரை சேர்ந்த ரேகா மற்றும் அவரது கணவர் காவ்ரா கல்பேலியா இருவரும் மிக ஏழ்மையானவர்கள். பழைய பொருட்களை சேகரித்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். ரேகா ஏற்கனவே 16 குழந்தைகளுக்குத் தாயானவர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள குழந்தைகளில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட்டது, மற்றவர்களும் தற்போது திருமண வயதை எட்டியுள்ளனர்.
இந்த சூழலில், ரேகா 17வது முறையாக கர்ப்பமடைந்தார். குடும்பம் வறுமையில் இருந்தாலும், குழந்தையை பெற்றெடுக்க இந்த தம்பதி உறுதியாக இருந்தனர். பிரசவ வலி ஏற்பட்டபோது, ரேகாவை அருகில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 16 குழந்தைகள் பிறந்த உண்மையை மறைத்து, இது ஐந்தாவது பிரசவம் என மருத்துவமனையில் பதிவு செய்துள்ளனர். தற்போது, தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். இந்த சம்பவம், உண்மையறிந்த மருத்துவர்களையும், அப்பகுதி மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, தங்களுக்குச் சொந்த வீடு கட்டித் தர அரசு உதவ வேண்டும் என காவ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.