டெல்லியை ஒட்டிய ஃபரிதாபாத்தில், 17 வயது மாணவி ஒருவர் தன்னை பின் தொடர்ந்த நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூலகத்திலிருந்து திரும்பும் வழியில் நடந்த இச்சம்பவம், சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் மாணவியின் அன்றாட பழக்கவழக்கங்களை அறிந்து, நூலகத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்துள்ளார். மாணவி வந்தவுடன், துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை சுட்டுள்ளார். குண்டுகள் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றின் ஓரத்தில் பாய்ந்தன. தாக்குதலுக்கு பிறகு, குற்றவாளி கைத்துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சீராக உள்ளார் என்றும், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மாணவி அளித்த வாக்குமூலத்தில், "அந்தப் பையனை எனக்கு தெரியும், அவன் சில நாட்களாக எனக்கு தொல்லை கொடுத்து வந்தான்" என்று மாணவி அடையாளம் காட்டியுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றவாளியை தேடி பிடிக்க பல சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.