கர்நாடக மாநிலத்தின் ஆன்மிக சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்று சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சைவ மட பீடம் உள்ளது. இந்த ஊருக்கு அருகே அமைந்துள்ள 'கேசவே' என்ற தலத்தில், 'கமண்டல நதி கணபதி திருக்கோவில்' அமைந்துள்ளது. உயிர்களின் ஆதாரமாக திகழும் நீர், இந்த ஆலயத்தில் வற்றாமல் சுரந்து வருவது ஒரு பெரும் அதிசயமாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த கோவிலில், விநாயகர் திருவுருவ சிலையின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையிலிருந்து நீர் இடைவிடாமல் பொங்கி வந்தபடியே இருக்கிறது. வேத காலத்தில் உலகம் முழுவதும் கடும் வறட்சியால் தவித்தபோது, உயிர்களின் தாகம் தீர அன்னை உமாதேவி, இங்கு அருள்பாலிக்கும் கமண்டல கணபதி சிலையின் அடியில் வற்றாத நீர் ஊற்றை ஏற்படுத்தினார் என்பது தல வரலாறு.
சில நேரங்களில் பெருக்கெடுத்தும், சில நேரங்களில் சாதாரணமாகவும் இந்த துளையிலிருந்து நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சுனை நீரை கொண்டே இக்கோவிலில் உள்ள அனைத்து தெய்வ திருவுருவங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பக்தர்கள் இந்த நீரை புனித தீர்த்தமாக கருதி குடுவைகளில் பிடித்து செல்கிறார்கள். விநாயகரின் முன்பாக தோன்றும் இந்த புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, அருகிலுள்ள துங்கா நதியில் கலந்து பெருக்கெடுக்கிறது. இது உண்மையிலேயே பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு நீர் பெருக்கெடுக்கும் ஆலயமாகும்.