திருச்சியிலிருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில், பெருகமணி என்ற அழகான கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம், கல்யாணத் தடைகளை நீக்கி, விரைவில் மாங்கல்ய வரம் அருளும் சிறப்புமிக்க இடமாகப் போற்றப்படுகிறது.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்கள் அமையும். சிலருக்கு, திருமணம் என்பது பெரும் சவாலாகவே இருக்கலாம். 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் தவிப்பவர்கள் ஏராளம். இதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், சித்தர்கள் மூலமாக சிவபெருமான் சில அருமையான வழிகளைக் காட்டியுள்ளார். அதில் முக்கியமானதுதான் இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு!
இங்கு வீற்றிருக்கும் மூலவரான அகத்தீஸ்வரரையும், அன்னை ஆனந்தவல்லியையும் மனம் உருகிப் பிரார்த்தித்தால், திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமாகப் பழைமையான வில்வ மரம் கம்பீரமாக நிற்கிறது.
30 வயதை கடந்தும் திருமணமாகாத ஆண், பெண் இரு பாலரும் இந்த ஆலயத்திற்கு ஒருமுறையாவது வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது திடமான நம்பிக்கை. குறிப்பாக, அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபடுவது, சிறப்பான பலன்களை பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.
அவ்வாறு வரும்போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, ஒரு முகூர்த்த நேரம் (சுமார் 90 நிமிடங்கள்) மனமுருகிப் பிரார்த்திக்க வேண்டும். இந்த வழிபாட்டின் பலனாக, திருமணம் கைகூடாமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நிச்சயம் என்கிறார்கள்.