மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஞாயிறு அன்று வருகை தந்த நிலையில், விதிகளை மீறி தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் தனது எக்ஸ் (X) பதிவில் கூறியிருப்பதாவது:
"நீங்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தது நல்ல விஷயம் தான். ஆனால் ஏன் விதிகளை மீற வேண்டும்? தாமரைக் குளம் பகுதியை தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் உள்ளே உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளீர்கள்.
பொதுமக்களுக்கு ஒரு விதி; மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதியா? இந்த பாகுபாடு ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பாஜக தரப்பிலிருந்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.