கர்நாடக மாநிலத்தின் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான சிருங்கேரி அருகே அமைந்துள்ளது 'கேசவே' என்னும் திருத்தலம். இங்குதான் உலக உயிர்களின் ஆதாரமான நீரை, வற்றாமல் பொங்கச் செய்யும் 'கமண்டல கணபதி திருக்கோவில்' கம்பீரமாக வீற்றிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையான இந்தக் கோவிலில், விநாயகர் சிலையின் முன்பாக உள்ள சிறிய துளையில் இருந்து தண்ணீர் இடைவிடாமல் சுரந்து வருவது, பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
வேத காலத்தில் உலகம் முழுவதும் கடும் வறட்சியால் வாடியபோது, உயிர்கள் அனைத்தும் நீரின்றித் தவித்தன. அத்தகைய ஒரு சூழலில், அன்னை உமாதேவி இக்கோவிலில் அருள்புரியும் தனது மூத்த மைந்தனான கமண்டல கணபதி விக்ரகத்தின் அடியில், வற்றாத நீர் ஊற்றை உருவாக்கி உலக உயிர்களின் தாகத்தைத் தீர்த்ததாக இத்தலத்தின் வரலாறு கூறுகிறது.
சில நேரங்களில் பெருக்கெடுத்தும், சில நேரங்களில் மிதமான அளவிலும் இந்தத் துளையிலிருந்து நீர் வெளிவந்தபடியே இருக்கிறது. இந்தச் சுனை நீரை கொண்டே கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பக்தர்கள் இந்த நீரை புனித தீர்த்தமாகக் கருதி, குடங்கள் மற்றும் குடுவைகளில் பிடித்துச் செல்கின்றனர். விநாயகர் முன்பாக உருவாகும் இந்தப்புனித நீர், அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் ஓடி, சற்று தொலைவில் பாயும் துங்கா நதியில் கலப்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும்.