கோரக்கர் சித்தரின் பிறப்பு மிகவும் விசேஷமானது. குழந்தை பேறின்றி வருந்திய பெண்ணுக்கு, சித்தர் மச்சேந்திரர் (சிவனின் அருளால் மீன் வயிற்றில் பிறந்தவர்) திருநீறு அளித்தார். ஆனால், அப்பெண் அதை அடுப்பில் போட்டு எரித்துவிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரரை சந்தித்தபோது நடந்ததை கூறி அழுதார். கோபப்படாத மச்சேந்திரர், அப்பெண் திருநீறை எரித்த சாம்பல் கலந்த எருக்குழிக்கு சென்று "கோரக்கா... கோரக்கா..." எனக் கூப்பிட்டார். உள்ளிருந்து 10 வயது சிறுவன் ஒருவன் தெய்வீக அம்சங்களுடன் வெளியே வந்தான். அவனே கோரக்கர்.
வருந்திய தாயிடம் சிறுவனை ஒப்படைத்தபோதும், கோரக்கர் தாயை நிராகரித்து, "என்னை ஒதுக்கிய உன்னுடன் வாழ விரும்பவில்லை" எனக் கூறி, மச்சேந்திர சித்தருடன் தவ வாழ்வு மேற்கொள்ளச் சென்றார். அதன்பிறகு, கோரக்கர் மச்சேந்திரரின் மாணாக்கராகி, ஞான நெறிகளை கற்று, சித்தி பெற்றார்.