திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், முருக பெருமானின் ஆறு படைவீடுகளில் இரண்டாவதாகும். இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்றும், வாழ்வில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. செந்தில் ஆண்டவர் நிகழ்த்தும் அற்புதங்கள் காரணமாக, இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இக்கோயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம், எதிரே அமைந்துள்ள நாழிக்கிணறு ஆகும். இதில் நீராடினால் பாவங்களும் துயரங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் தெற்கு புறமுள்ள நாழிக்கிணற்றில் நீராடிவிட்டு, பின் கடலில் நீராடி, அதன் பிறகே முருகனை தரிசிப்பது மரபு.
	 
	தல வரலாற்றின்படி, ஆரம்பத்தில் இருந்த 24 தீர்த்தங்களில் இப்போது நாழிக்கிணறு மட்டுமே எஞ்சியுள்ளது. முருகப்பெருமான் தன் வேலால் உருவாக்கியதால் இது கந்த தீர்த்தம் எனப்படுகிறது. 
	 
	இந்தத் தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தும் உப்புத்தன்மை அற்றதாகவும், சுவையானதாகவும், மேலும் எக்காலத்திலும் வற்றாமலும் இருப்பது இதன் மிகப்பெரிய அதிசயம் ஆகும். இதில் நீராடுபவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.