காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலை தந்து, நோய்களில் இருந்து காக்கின்றன. வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து எனப் பல நன்மைகளை காய்கறிகள் வழங்குகின்றன. எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களில் இருந்தும் காய்கறிகள் குழந்தைகளைக் காக்கின்றன. ஆனால், இந்த சத்தான காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி? இதோ சில வழிகள்:
குழந்தைகள் உங்களை பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, நீங்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதைக் காட்டினால், அவர்களும் அதை பின்பற்றுவார்கள்.
புடலங்காய், பீர்க்கங்காய், கத்திரிக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை வெட்டும்போதும், பரிமாறும்போதும் வித்தியாசமான வடிவங்களில், சிறு துண்டுகளாக மாற்றி கொடுங்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்களின் வடிவில் காய்கறிகளை உருவாக்கி கொடுத்தால், அவர்கள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட காய்கறியை விரும்பவில்லை என்றால், அதை முற்றிலும் ஒதுக்கிவிடாதீர்கள். ரசனைகள் மாறலாம் என்பதால், அடுத்த முறை மீண்டும் முயற்சிக்கலாம்.
காய்கறிகளை வாங்க கடைக்கு அழைத்து சென்று, அவற்றை பார்க்கவும், நுகரவும், உணரவும் அனுமதியுங்கள். காய்கறிகளை கழுவுவது, எடுத்து வைப்பது போன்ற சிறு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிட தூண்டும்.