ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைப் பேறு என்பது முழுமை தரும் அத்தியாயம். குழந்தையை கருவில் சுமந்து, வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாகப் பராமரிக்கும் அரும் பொறுப்பு தாய்க்கே உரியது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், உடல்நலத் தேவைகளையும் பூர்த்தி செய்வது மிக முக்கியம்.
குழந்தைப் பேற்றுக்குப் பின் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற மஞ்சள் மிகவும் உதவுகிறது. மஞ்சளில் உள்ள வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள், உடலின் உட்புற மற்றும் வெளிப்புறக் காயங்களை விரைவாகக் குணப்படுத்துவதுடன், வீக்கத்தையும் குறைக்கின்றன. எனவே, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து அருந்துவது நல்லது.
குழந்தை பிறந்த பிறகு தாயின் உடலில் பல்வேறு சத்துக்கள் இழக்கப்பட்டு, உடல் பலவீனம் அடைகிறது. இந்த நேரத்தில் தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பும் இருப்பதால், தாய்க்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
பிரசவத்தால் ஏற்படும் உடல் வலி, காயங்கள் விரைவில் குணமாகவும், தேவையான அளவுக்குத் தாய்ப்பால் சுரக்கவும் ஏற்ற சத்துள்ள உணவுகள் அவசியம். ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பருப்புகள், பல்வேறு விதைகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வைட்டமின் பி-12 சத்து சரியான அளவில் உணவில் இருப்பது உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கும். தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் உடல் சோர்வைப் போக்க இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி போன்றவற்றை உண்ணலாம். மேலும், கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.