இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் சேர்த்தார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்ட் போட்டியில் அவர் 430 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் கில்லின் இந்த அபார இன்னிங்ஸை முன்னாள் கேப்டன் கோலி புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதில் “அருமை நட்சத்திர வீரா.. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம். இது மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன். ” என தெரிவித்துள்ளார்.