Publish Date: Wed, 18 Jun 2025 (11:03 IST)
Updated Date: Wed, 18 Jun 2025 (11:06 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவரை வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி இதுபோல வெளியில் வைத்து வந்ததால் இந்த முடிவை அஸ்வின் எடுத்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. தற்போது ஐபிஎல் மற்றும் TNPL போன்ற ப்ரான்ச்சைஸ் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய சொந்த மாநில அணியான சி எஸ் கேவுக்கு மீண்டும் திரும்பினார். இந்நிலையில் தற்போது அஸ்வினின் சிறுவயது தொடங்கி அவர் கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்குள் இடம்பிடித்து வெற்றி பெற்றது வரையிலான வாழ்க்கையை “The Making of Ravichandran ashwin” என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துள்ளனர். அதில் அஸ்வின் பற்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் அவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அஸ்வினின் சிறுவயது கிரிக்கெட் வாழ்க்கை சம்மந்தமான காட்சிகள் நடிகர்களை வைத்து மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த ஆவணப்படம் நாளை சி எஸ் கே அணியின் யுடியூப் பக்கத்தில் ரிலீஸாகிறது.