பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் 1500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் முன்னணிக் கவிஞராகத் திகழ்ந்தார். தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்ற பாடல் ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்த்க்காரர். தனது 41 ஆவது வயதிலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் பொன்விழா ஆண்டு என்பதால் ஜூலை 19 ஆம் தேதியன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இசை நிகழ்ச்சியைத் தமிழ்த் திரையுலகம் நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆனந்த யாழை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திரைப் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே.பிரசன்னா, பாடகர்கள் திப்பு ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.