Publish Date: Wed, 23 Sep 2020 (14:57 IST)
Updated Date: Wed, 23 Sep 2020 (14:59 IST)
குன்றத்தூரில் டிவியை சானிட்டைசர் கொண்டு துடைத்த சிறுவன், அது பழுதானதால் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி கவிதா. இருவரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் சாம் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்றிருந்த சமயம் டிவியை சானிட்டைசர் கொண்டு துடைக்க சாம் முயற்சி செய்துள்ளான். எதிர்பாராத விதமாக துடைக்கும்போது டிவி பழுதடைந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் தன் பெற்றோர் அடிப்பார்கள் என பயந்த சாம் வீட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாம் வீட்டிற்கு வந்த நண்பர்கள் இதை கண்டதும் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைக்க, சாம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்னரே சாம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.