Publish Date: Fri, 25 May 2018 (09:30 IST)
Updated Date: Fri, 25 May 2018 (09:33 IST)
தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு அரசு அனுதாபம் தெரிவித்துவிட்டால் அவர்களின் உயிர் திரும்பி வருமா என நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 22ம் தேதி, தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்று முன் தினமும் நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “ஆரோக்கியத்திற்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் போராடிய அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆறுதல் மட்டுமே கூறுவார்கள். ஆனால், இறந்தவர்களின் உயிர் திரும்பி வருமா?. தொடர்ச்சியாக மக்கள் இப்படி போராடி, மரணமடைய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது. போலீஸ் இப்படித்தான் செய்யும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவே மக்கள் போராடினார்கள். ஆனால், அந்த அரசு மக்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது? நமக்கு மாற்றம் தேவை.
இந்த அரசு வீட்டிற்கு செல்ல வேண்டும். நமக்கு தீர்வுதான் தேவை.இதை ஏன் ஆங்கிலத்தில் கூறுகிறேன் எனில், இந்த பிரச்சனைக்கு பின்னால் இருந்து, அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே. ஊடகங்கள் தமிழ்நாட்டு பிரச்சனைகள் பற்றி பேசுவதே இல்லை. எங்களுடன் மோத வேண்டாம். நாங்கள் தமிழர்கள். மனிதநேயத்துடன் இருங்கள்” என கோபமாக பேசியுள்ளார்.