Publish Date: Fri, 25 May 2018 (09:04 IST)
Updated Date: Fri, 25 May 2018 (09:08 IST)
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு நடத்த அழைத்த விடுத்தது. தூத்துகுடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பெரிய ஆதரவு இல்லை என்பது சென்னையில் இன்று பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதே உதாரணம்.
மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் குறைந்துள்ளதாகவும் எனவே வியாபாரம் வழக்கத்தை விட குறைவாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் கடையடைப்பு குறித்து வியாபாரிகள் கருத்து கூறியபோது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் சமூக விரோதிகள் சிலர் கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் ஒருசிலர் கடைகளை அடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் நேற்று தான் வணிகர் சங்கத்தின் கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் இன்று மீண்டும் கடையடைப்பு நடத்தினால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் என்றும் அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் இணைந்து ஒரே நாளில் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துவதே நல்லது என்றும் சிலர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு போராட்டத்தின்போதும் கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு வணிகர்கள் மடியில் கைவைப்பதாகவும், அரசியல் கட்சி தலைவர்களின் சாட்டிலைட் சேனல்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருமானம் பார்க்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் இல்லங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,.
webdunia
Publish Date: Fri, 25 May 2018 (09:04 IST)
Updated Date: Fri, 25 May 2018 (09:08 IST)